திரெங்கானு, சுகாய், ஜெராம் பூத்தேவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தினால் அடித்துச் செல்லப்பட்ட ஒன்பதாவது நபரான முஹமட் ஃபிக்ரி சாலிமானின் சடலம் இன்று சனிக்கிழமை (ஜூலை 8) காலை 7 மணியளவில் செமராவில் உள்ள கம்போங் பாரிட் கூடாவில் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், சம்பவ இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மணல் கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரிடெண்டன் ஹன்யான் ரம்லான் தெரிவித்திருந்தார்.
ஒன்பதாவது சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் 14 வயதான புத்ரி நோர் ஃபதின் கரீமை தேடும் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.
இதனிடையே, முன்னதாக மீட்கப்பட்ட எண்மரின் சடலங்களும் பகாங், குவாந்தானில் உள்ள லெபார் ஹிலிர் 3 இஸ்லாமிய மையத்து கொல்லையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.









