சிறப்பு பொருளியல் மண்டலம் அமைப்பது தொடர்பில் சிங்கப்பூர் – ஜோகூர் பேச்சுவார்த்தை

ஜோகூரிலும் சிங்கப்பூரிலும் சிறப்பு பொருளியல் மண்டலம் அமைக்க மலேசியாவும் சிங்கப்பூரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையில் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டி, பொருளியல் இணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இதன் நோக்கம் என்று சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை கூறினார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்கான ஆய்வை மேற்கொள்ள, இஸ்கந்தர் மலேசியாவுக்கான மலேசிய-சிங்கப்பூர் கூட்டு அமைச்சர் நிலைக் குழுவின்கீழ் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் நிலைக் குழுவுக்கு சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் லீயும் மலேசியப் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியும் இணைத் தலைவர்களாக உள்ளனர்.

சிறப்பு பொருளியல் மண்டலத்திற்கான பரந்த ஒத்துழைப்பு அடிப்படைகளைப் பணிக்குழு தயாரிக்கும். பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அக்டோபர் மாதம் நடத்தவிருக்கும் சந்திப்பின்போது பணிக்குழு அதன் அறிக்கையை வெளியிடும் என்று இரு அமைச்சர்களும் ‌ஷங்ரிலா ஹோட்டலில் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அமைச்சர்நிலைக் குழுவின் வருடாந்தர சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரு அமைச்சர்களும் வழிநடத்திய இந்தச் சந்திப்பில் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜோகூரின் வலுவான வளர்ச்சியையும் இந்த வட்டாரத்தில் சிங்கப்பூர் செய்திருக்கும் கணிசமான முதலீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பொருளியல் மண்டலம் அமைக்கப்படும் என்று அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

ஜோகூருக்கு 2022ல் மட்டும் 70.6 பில்லியன் ரிங்கிட் (20.47 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்தன. ஜோகூரின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர் என்பதும், ஜோகூரின் உற்பத்தித் துறையில் நேரடியாகச் செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலீட்டில் சுமார் 70 விழுக்காட்டுக்கு சிங்கப்பூர் பங்களித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு பொருளியல் மண்டலத்திற்கு இரு தரப்பும் வலுவான ஆதரவளிக்கின்றன. இந்த மண்டலம், இரு தரப்பிலுள்ள மக்களுக்கும் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் அமைத்துக்கொடுக்கும் என்றார் திரு டெஸ்மண்ட் லீ.

போக்குவரத்து இணைப்பு, புத்தாக்கம், தொழில் நடைமுறை, சுற்றுப்புறம், சுற்றுலாத்துறை, தொழில்நுட்பத் திறன் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடையும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த கூடுதலாக ஒரு பயணப்படகுச் சேவையைத் தொடங்குவது குறித்தும் இருநாட்டு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூருக்கும் தஞ்சோங் பெங்கிலிக்கும் இடையிலும், ஜூலையில் சிங்கப்பூருக்கும் டெசாருவுக்கும் இடையிலும் இரு பயணப்படகுச் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்தச் சேவைகளுக்கு இருநாட்டுப் பயணிகளிடையிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக அமைச்சர்களின் அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், புத்திரி துறைமுகத்துக்கும் துவாஸுக்கும் இடையில் புதிய பயணப்படகுச் சேவை தொடங்கும் சாத்தியம் குறித்து இருநாட்டு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கின்றன.

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் சேவையின் பணிகள் நல்லமுறையில் நடந்து வருவதாக அமைச்சர்நிலைக் குழுவின் சந்திப்பில் குறிப்பிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here