குவாந்தானிலுள்ள ஜாலான் புத்ரா சதுக்கம் 7, ஸ்ரீ தாகங்கான் வாகன நிறுத்துமிடப் பகுதியில் காரில் ஏற்பட்ட தீயினைத்தொடர்ந்து, காரின் ஓட்டுநர் இருக்கையில் தீக்காயங்களுடன் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், காலை 6.58 மணிக்கு தகவல் கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பஹாங்கின் மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறினார்.
தகவல் கிடைத்த உடனே குவாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் இயந்திரங்களுடன் அதிகாரிகள் உட்பட ஏழு தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட காரின் தீயை அணைக்க உதவுவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது, இருப்பினும் சம்பந்தப்பட்ட கார் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தீயில் எரிந்து நாசமானது, அதே நேரத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று சுல்ஃபாட்லி கூறினார்.