கோத்தா திங்கி, ஜூலை 31:
செனாய்-டெசாரு விரைவுச் சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய ஐந்து பேர் கொண்ட லம்போர்கினி கார் ஓட்டுநர்கள் குழுவை போலீசார் இனங்கண்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 29) நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஐந்து ஆண் ஓட்டுநர்களும், கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், அத்தோடு விசாரணை முடியும்வரை அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (ஜூலை 31) இஸ்கண்டார் புத்திரி போலீஸ் தலைமையகத்தில் நடந்த சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது, குறித்த அதிவேக கார்களின் ஓட்டுநர்கள் மலேசியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்ததாகவும், ஜோகூருக்கு வர விரும்புபவர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவர்கள் இங்கே இருக்கும்போது அவர்கள் ஒழுக்கமாகவும் சட்டத்தைப் பின்பற்றவும் வேண்டும்.” என்று அவர் கூறினார்.
“சாலையைப் பயன்படுத்துபவர்கள் யாராயினும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மேலும் மக்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் மற்றும் எந்த தவறுகளையும் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் அவை உடனே சமூக ஊடகங்களில் பகிரப்படும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.