கடந்த 2019-ஆம் ஆண்டில் 103,664 ரிங்கிட் மதிப்பிலான போலி ரசீதுகளை சமர்ப்பித்து, போலி உரிமை கோரல் செய்த குற்றச்சாட்டின்பேரில் , மலேசிய தொண்டூழிய துறை அதாவது ரேலாவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உட்பட மூவர் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தை ஏற்று, வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் அம்மூவரையும் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி லௌவ்லி நதஷா சார்ல்ஸ் உத்தரவிட்டார்.
நேற்று, சபா, லபுவானில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு வந்த 30 வயதிற்கு உட்பட்ட பெண் உட்பட அம்மூவரும் கைது செய்யப்பட்டனர்.
2019-ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டது தொடர்பான போலி ரசீதுகளைக் கொண்ட ஆவணங்களை, அவர்கள் சபா ரேலா தலைமையகத்தில் சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டம், செக்ஷன் 18-டின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.








