அம்பாங் ஜெயா, ஆகஸ்ட்டு 3:
மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு மியன்மார் நாட்டவர் உட்பட மூவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் (நீலம் மற்றும் வெள்ளை நிற யமஹா Y125) திருட்டுப்போனதாக 23 வயதான ஒரு உணவு விநியோகஸ்தராக பணிபுரியும் ஒருவரிடமிருந்து, 25/07/2023 அன்று, காவல்துறை புகாரைப்பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்விசாரணையின் மூலம், ஒரு மியன்மார் நாட்டு ஆடவர் மற்றும் இரு மலாய்கார ஆண்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 35 வயதுடையவர்கள் என்றும், நான்காவது சந்தேகநபரை போலீசார் இன்னும் தேடி வருவதாகவும், அத்தோடு சந்தேகநபர்கள் அனைவரும் வேலையற்றவர்கள் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் முதலாம் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்களிடம் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, அதேவேளை மூன்றாவது சந்தேகநபர் (6) குற்றப் பதிவுகள், (5) போதைப்பொருள் வழக்கு மற்றும் ஒரு வழக்கில் அவர் இன்னும் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
குறித்த கும்பல் அம்பாங் மாவட்டம் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மொபைல் போன்களை திருடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காணாமல் போன மோட்டார் சைக்கிளின் பாகங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்றும் குறித்த மூன்று சந்தேக நபர்களும் ஆகஸ்ட்டு 5ஆம் தேதி வரை (4) நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ACP அசாம் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.