கோலாலம்பூர், ஆகஸ்ட் 7:
இந்தாண்டின் தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக் கொடியை பறக்கவிடும் பிரச்சாரத்தின் முன்முயற்சியாக கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (DBKL) பல்வேறு அளவுகளில் சுமார் 32,500 மலேசியக் கொடிகளை விநியோகித்துள்ளது.
கோலாலம்பூரைச் சுற்றியுள்ள அரசாங்க நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், கல்விக் கழகங்கள், மக்கள் பிரதிநிதி மன்றங்கள், வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அந்நிறுவனங்களின் 35 பிரதிநிதிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டதாக டத்தோ பண்டார் டத்தோ கமாருல் சமான் மாட் சாலே தெரிவித்தார்.
டாக்சி ஓட்டுநர்கள், உணவு விநியோகிப்பாளர்கள், DBKL வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட 20 பிரதிநிதிகளும் ஜாலூர் கெமிலாங் என அழைக்கப்படும் எமது நாட்டின் தேசியக் கொடிகளைப் பெற்றுக் கொண்டனர்.
நாட்டின் தேசியக் கொடியைப் பறக்கவிடும் பிரச்சார முயற்சியில் அனைத்து தரப்பினரும் ஈடுபடுவதை உறுதிசெய்ய டி.பி.கே.எல் மையத்தில் உள்ள 180 கட்டிட உரிமையாளர்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை கடிதங்களை வெளியிட்டுள்ளதாக இன்று, கோலாலம்பூரில், கூட்டரசு பிரதேச நிலையிலான தேசியக் கொடியை ஒப்படைக்கும் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் கூறினார்.