‘கேரளா’ பெயரை ‘கேரளம்’ என மாற்ற சட்டசபையில் தீர்மானம்

 

திருவனந்தபுரம், ஆகஸ்ட்டு 9:

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரண்டாம் நாள் சட்டசபைக் கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டன.

தீர்மானத்தின்மீது எந்தவித திருத்தங்களும் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படவில்லை.

இதையடுத்து சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் கைக்கூப்பியதை அடிப்படையாக வைத்து கேரளா பெயரை மாற்றும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது,” என்றார்.

“சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது,” என்று முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“பொது சிவில் சட்ட தீர்மானத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டும்,” என்று திரு பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here