கூச்சிங், ஆகஸ்ட்டு 17:
ஆகஸ்ட் 1 முதல் 15 வரை சரவாக்கில் தீ ஏற்படும் சாத்தியமுள்ள 77 இடங்களை, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் (ASMC)கண்டறிந்துள்ளது.
இதில் ஆகஸ்டு 1 அன்று அதிகபட்சமாக 36 இடங்கள் பதிவு செய்யப்பட்டன என்று, சரவாக் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர், டாக்டர் ஹஸ்லாண்ட் அபாங் ஹிப்னி கூறினார்.
அதே காலகட்டத்தில், கலிமந்தானில் 2,153 தீ ஏற்படும் சாத்தியமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டன, அதில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மட்டும் மிக அதிகமாக 376 இடங்கள் இனங்காணப்பட்டன.
மேலும் “ஆகஸ்ட் 13-15 வரை, சரவாக்கில் தீ ஏற்படும் சாத்தியமுள்ள இடங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் கலிமந்தானில் 424 தீ ஏற்படும் சாத்தியமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்த மாநிலத்தில் மொத்தம் 195 தீ ஏற்படும் சாத்தியமுள்ள இடங்களும், இந்தோனேசியாவின் கலிமந்தானில் 2,820 தீ ஏற்படும் சாத்தியமுள்ள இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக ASMC தெரிவித்துள்ளது.