ஜோகூர் பாரு:
எந்தவொரு அரசாங்க உதவிக்கும் எந்த அரசியல் கட்சியின் சின்னமும் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கும், சிம்பாங் ஜெராம் சட்ட தொகுதியிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கப்படும் உதவிகளில் எந்த கட்சி சார்ந்த சின்னங்களும் இடம்பெறக்கூடாது என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசியுடன் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.
“மக்களுக்கு அரசு உதவி வழங்குவதில் சிக்கல் உள்ளது,அரசியல் கட்சிகளின் சின்னங்களைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அரசாங்கத்திடமிருந்து பெறப்படுகின்றன,” என்று அவர் இன்று ஜோகூரிலுள்ள டதரான் தாமான் டாலியாவில் “கெந்தூரி ரக்யாத்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 1,000 ரஹ்மா கூடைகளை ஒப்படைத்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இரண்டு இடைத்தேர்தல்களுக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாக தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.