பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) வெவ்வேறு இடங்களில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு மலையேறிகள் காயங்களுக்குள்ளானதால் தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
முதல் சம்பவத்தில், 25 வயதுடைய பெண் ஒருவர், கோத்தா டாமான்சாராவில் உள்ள Taman Eco Rimba நடைப்பயணம் மேற்கொண்டபோது வலது காலில் காயம் அடைந்தார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நண்பகல் நேரத்தில் அழைப்பு வந்ததும் தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. “சம்பவ இடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அசைய முடியாது காணப்பட்டார். ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினோம்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டாவது சம்பவத்தில், வியூ பாயிண்ட் தாசிக் செர்மின், செத்தியா ஆலத்தில் நடைபயணம் மேற்கொண்டபோது 38 வயது பெண் ஒருவர் கீழே விழுந்து, கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று காலை 10.04 மணியளவில் நடந்ததாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
“குறித்த பெண் நடைபயணப் பாதையில் இருந்து 1 கிமீ தொலைவில் கீழே விழுந்தார். நாங்கள் அவரையும் காப்பாற்றியதுடன், காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பினோம்,” என்று அவர் கூறினார்.