ரவாங்:
ஜாலான் கோலா கேரிங் என்ற இடத்தில் இன்று, கன்டெய்னர் லோரியுடன் கார் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்ததில் இருவர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 3.53 மணிக்கு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், உடனே ரவாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, உள்ளூர் 26 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகியவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
குறித்த விபத்தில் சம்மந்தப்பட்ட”ஹோண்டா சிட்டி கார், மோதலுக்கு பின் தீப்பிடித்ததில் 70 விழுக்காடு எரிந்து நாசமானது, அதே நேரத்தில் கண்டெய்னர் லோரி பாதி தீயில் எரிந்து நாசமானது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் வாகனத்தை விட்டு இறங்கியதால் கண்டெய்னர் லோரி ஓட்டுநர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன என்றார்.