புக்கிட் மெர்தாஜாம் அல்மாவில் உள்ள ஒரு ஆலயத்தின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமய சடங்கு விழா நடத்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட அடிதடி சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 21 முதல் 25 வயதுக்குட்பட்ட மூவரும் கோயில் பகுதியில் அமைதியைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செபெராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் டான் செங் சான் தெரிவித்தார்.
செங் சானின் கூற்றுப்படி, நள்ளிரவு 12.05 மணியளவில் இந்த ஆண்கள் குழு ஒருவருக்கொருவர் கைகளாலும் நாற்காலிகளாலும் தாக்கிக் கொண்டனர். அப்போது கோவிலில் சமயச் சடங்கு ஒன்றை நடத்துவதற்காக ஏராளமானோர் இருந்தனர் என அவர் திங்கட்கிழமை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
டுவிட்டர் கணக்கு உரிமையாளர் ஒருவர் பதிவேற்றிய 14 மற்றும் 27 வினாடிகள் நீடிக்கும் இரண்டு வீடியோக்கள் திங்கள்கிழமை காலை 10.15 மணியளவில் வைரலானது என்று அவர் விளக்கினார். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று செங் சான் கூறினார்.