கோலா லங்காட்:
சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றதாக நம்பப்படும் 11 பெண்கள் உட்பட மொத்தம் 33 இந்தோனேசிய நாட்டவர்கள் நேற்று, பந்திங்கின் கெலானாங் கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கள்ளக்குடியேறிகளின் குழு கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரவோடு இரவாக அப்பகுதியை விட்டு வெளியேற முயன்றதாக அறியப்படுகிறது.
17 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளை மலேசிய தன்னார்வத் துறையின் (ரெலா) உதவியுடன் மலேசிய ஆயுதப்படையின் 4 வது பட்டாலியன் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர்,அஹ்மட் ரித்வான் முகமட் நூர் @ சாலே தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், சந்தேக நபர்கள் அனைவரும் கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் அனைவரும் தற்போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிவரவுச் சட்டம் 1959/1963 இன் பிரிவு 6 (1) (c) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.