ஜோகூர் பாருவில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், பாலஸ்தீனத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று துணைப் பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கம் எப்போதும் விழிப்புடன் இருப்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பாலஸ்தீனத்தை ஆதரிப்பதற்கு எதிராக நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற வழிவகுத்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அச்சுறுத்தல் என்று காவல்துறை கூறியுள்ளது, நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மலாக்காவில் நடந்த கட்சி கூட்டத்திற்குப் பிறகு ஜாஹிட் கூறினார்.
நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, அச்சுறுத்தல்களுக்கு கூட (பாலஸ்தீனத்திற்கு எதிராக) பயப்பட வேண்டியதில்லை. உண்மையில் நாம் பாலஸ்தீனத்திற்கு நிதி உதவி செய்கிறோம். நாங்கள் பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரிப்போம் என்று அவர் கூறியதாக மலேசிய கெசட் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலிய குடிமக்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்த ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களுக்குப் பின்னர் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்க மலேசியா இலக்கு வைத்துள்ளதாக நேற்று ஜாஹிட் கூறினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக RM10 மில்லியன் மனிதாபிமான உதவி தொடங்கப்படும் என்றார். நிறுவனங்களும் பொதுமக்களும் நிதியை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஜோகூர் பாருவில் உள்ள Mid Valley Southkey Mallஇல் மாலை 6 மணியளவில் மாலின் நிர்வாகத்திற்கு அடையாளம் தெரியாத அழைப்பாளர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் ரவூப் செலமாட், வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவைக் காட்டுவதற்கு எதிராக எச்சரித்ததாகக் கூறினார்.








