ஜார்ஜ்டவுன்:
கடந்த செவ்வாய்கிழமை ஜார்ஜ்டவுனைச் சுற்றி நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் மூன்று தனித்தனி சோதனைகளின் மூலம் ஒரு பெண் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் சொல்லப் போனால், போதைப்பொருள் கடத்துவதை மறைக்க, அந்தக் கும்பல் காரை போதைப்பொருள் பதுக்கி வைக்கும் இடமாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது என்று, வடகிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வி சரவணன் கூறினார்.
வடகிழக்கு மாவட்ட தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவினால், செவ்வாய்க்கிழமை காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை Op Tapis என்ற குறியீட்டு பெயரில் குறித்த சோதனை நடந்தது.
ஜெலுதோங்கின் தாமான் ஸ்ரீ டாமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் சோதனை நடத்தப்பட்டது, அங்கு ஒரு பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
மேலும் குறித்த குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு ஹெரோயின் பொட்டலங்கள், சியாபு பொட்டலம் ஒன்று மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் நான்கு என்பன கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
“சந்தேக நபரின் தகவலின் அடிப்படையில், போலீசார் அதே பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தை சோதனை செய்ததில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் என்றும், குறித்த ஹோண்டா சிவிக் காரில் சோதனை நடத்தியதில் 228 கிராம் எடையுள்ள மேலும் இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
“அதைத் தொடர்ந்து, பெர்சியாரான் புக்கிட் கம்பீர் 1, கெலுகோர் பக்கத்தில் பெரோடுவா கான்சில் காரில் நடத்தப்பட்ட சோதனையில் 4.1 கிலோகிராம் எடையுள்ள ஒன்பது ஹெரோயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த சரவணன், 21 முதல் 42 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் போதைப்பொருளை விநியோகம் செய்வதற்கு முன்பு போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் இடமாக காரை பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
மேலும் விசாரணையில் கடந்த மாதம் முதல் இக்கும்பல் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
“அவர்கள் அனைவரும் நவம்பர் 21 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.




















