ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது அந்த துறை சார்ந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இப்படி சமீபத்தில் உருவான தொழில்நுட்பம் தான் ‘ChatGPT’. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ‘ChatGPT’ எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை பறிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய நிறுவனம்தான் Open AI. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியாக (CEO) இருந்தவர் சாம் ஆல்ட்மேன். திடீரென்று தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் Open AI நிறுவனத்தின் இயக்குநர்கள் அடங்கிய குழுவில் உண்மையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Open AI நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக மீரா முராட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வந்த நிலையில் CEOவாக பொறுப்பேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.