சென்னை:
யாரும் எதிர்பாராத வகையில் சென்னையில் பெருமழை பெய்துள்ளது என்றும் இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர் எனில் இப்போது வந்தது பேரிடர் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கைப் பேரிடர் பாதிப்புக்கு திமுக, அதிமுக ஆட்சியைக் குறைகூறுவதைக் கைவிட்டு அனைவரும் மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்படும் என்றார் கமல்ஹாசன்.
தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்படும். இது பேரிடர் வேளை. எனவே அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம்,” என்று கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த திரு. கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்ததாவது, துணிச்சலோடு களத்தில் இறங்கி மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டுகிறேன்.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கனமழை பெய்திருக்கிறது. இது ஒரு சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றங்களால் இதுபோன்ற பேரிடர்கள் எதி ர்காலத்தில் அடிக்கடி நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக வேண்டும். குறுகிய கால அவகாசத்திற்குள் அதிகளவு மழைப்பொழிவு என் பது சமீபகாலமாக வடஇந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் அடிக்கடி நிகழ் கிறது. பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதும், நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதும்தான் இப்போது அரசு உடனடியாகச் செய்யவேண்டியவை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் முறையாக disinfectant செய்த பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான வழிமுறைகளை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி புதிய வழிவகைகளைக் காண வேண்டும் வேண்டும் என வலியுறுத்தினார்.