கோலாலம்பூர்:
நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை எச்சரிக்கையை நேற்று மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்ததைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களை (JPBN/JPBD) உடனே செயல்படுத்துமாறு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) பல மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (டிசம்பர் 20) வெளியிடப்பட்ட பேரிடர் செயல்பாட்டுத் தயார்நிலை அறிவிப்பில், வெள்ளப் பேரடரால் பாதிக்கப்படாலாம் என நம்பப்படும் குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில், JPBN மற்றும் JPBD பணியாளர்கள் தங்கள் தயார்நிலையை அதிகரிக்குமாறு நட்மா வலியுறுத்தியிள்ளது.
ஒவ்வொரு நிவாரண மையமும் முறையான வசதிகளுடன் இருப்பதையும், போதுமான செயல்பாட்டுச் சொத்துகள் இருப்பதையும், அவை நல்ல நிலையில் மற்றும் தயாராக இருப்பதையும் JPBN மற்றும் JPBD ஆகியவை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியது.
“தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (NDCC) மூலம் நட்மா, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பேரிடர் நிலைமை மற்றும் தொழில்நுட்ப தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்.
மேலாண்மை மற்றும் செயல்பாட்டு உதவி பற்றிய தகவல்களைப் பெற “03-8064 2400 என்ற எண்ணில் தொலைபேசி, தொலைநகல் 03-8064 2429 அல்லது opsroom@nadma.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் NDCC ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.