(டில்லிராணி முத்து)
மஞ்சோங், ஜன.4-
மஞ்சோங்கிலுள்ள டிண்டிங்ஸ் இந்தியர்கள் சங்கம் பல ஆண்டுகளாக இந்த மஞ்சோங் மாவட்ட இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளன.
அவ்வகையில் மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கால்பந்துத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் இங்குள்ள டிண்டிங்ஸ் இந்தியர்கள் சங்க மண்டபத்தில் கால்பந்து பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்கள், அவர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர் என்று இதன் ஒருங்கிணைப்பாளர் கோ. மகாலிங்கம் கூறினார்.
இப்பயிற்சிப் பட்டறையில் நாடறிந்த தேசிய கால்பந்து விளையாட்டாளர் சி.நடராஜன் கலந்துகொண்டு பெற்றோருக்கு இவ்விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் தெள்ளத் தெளிவாக வி
ளக்கமளித்தார். அவரின் உரை பெற்றோர் அனைவருக்கும் தன்முனைப்பாக அமைந்துள்ளதெனவும் மகாலிங்கம் குறிப்பிட்டார்.
மற்றுமொரு முன்னாள் கால்பந்து விளையாட்டாளரான எஸ். சுப்பிரமணியம் மாணவர்களை அணுகி அவர்களின் தேவைகளையும் கால்பந்துத் துறையில் அவர்களின் கனவு, லட்சியம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாணவர்கள் எவ்வாறு இத்துறையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.








