கோலாலம்பூர்:
கோலாலம்பூர் தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங் சிங், லியாங் லியாங் எனும் இரண்டு பாண்டாக்களை மேலும் சில காலம் மலேசியாவில் வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் விரைவில் கோரிக்கை விடுக்கவிருப்பதாக அவர் கூறினார்.
“இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு நிலவுவதால், நன்கு ஆலோசித்து இந்தப் பரிந்துரையை சீன அரசாங்கத்தினர் ஏற்றுக்கொள்வர் என்று நம்புகிறேன்,” என்றார் அன்வார்.
நேற்று (ஜனவரி 27) நடந்த கோலாலம்பூர் தேசிய மிருகக்காட்சி சாலையின் 60ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தின்போது அவர் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
பாண்டாக்களுக்கு உயர்தரப் பராமரிப்பு தேவைப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரதமர், சிங் சிங்கும் லியாங் லியாங்கும் மலேசியர்கள் பலருக்கும் விருப்பமானவையாக மாறிவிட்டன என்றார்.
“மலேசியர்கள் அனைவரும் சீனா சென்று ராட்சத பாண்டாக்களைப் பார்க்க இயலாது. அதனால் அவர்கள் இங்குள்ள மிருகக்காட்சி சாலைக்கு வருகையளிக்கின்றனர். அவர்களில் சிலருக்கு இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு,” என்றார் அவர்.
பாண்டாக்களைப் பராமரிப்பதற்கு அதிக செலவானாலும் மிருகக்காட்சி சாலையின் வருகையாளர்களின் நலனும் கவனத்தில் கொள்ளப்படுவதாக அன்வார் கூறினார்.