ஜோகூர் பாரு:
கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மூன்று மாநிலங்களில் போலீசார் மேற்கொண்ட ஐந்து சோதனைகளில் போதைப்பொருள் கும்பலின் மூளையாக உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாட்டை போலீசார் முறியடித்தனர்.
ஜனவரி 24 மாலை 6.30 மணி முதல் ஜனவரி 25 ஆம் தேதி காலை 7 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், RM2.73 மில்லியன் மதிப்புள்ள சுமார் 83 கிலோகிராம் போதைப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக ஜோகூர் காவல்துறை தலைமை ஆணையர் எம் குமார் தெரிவித்தார்.
23 முதல் 40 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜோகூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரும் இணைந்து பாரிட் ஜாவா, பெர்மாடாங் பாவ், பினாங்கு, முஅத்ஸாம் ஷா, பகாங் மற்றும் மூவாரில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயல்பாடானது, கிராம வீடுகளை போக்குவரத்து மற்றும் போதைப்பொருட்களுக்கான சேமிப்புக் கடைகளாக மாற்றி, பின்னர் கடல்வழியாக அண்டை நாடுகளுக்கு அவற்றை கடத்துவது என்று ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சோதனையின் போது, 82.86 கிலோ எடையுள்ள சீன தேநீர் பொட்டலங்களில் 80 பிளாஸ்டிக் பொட்டலங்கள் சியாபு, 2.78 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.5 கிராம் கெடமைன் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சோதனையில், 8 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், பல்வேறு நகைகள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் ரொக்கப்பணம் என மொத்தம் 1.78 மில்லியன் ரிங்கிட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்றார்.