கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரலாற்றில் கிண்ணத்தை வென்ற வயதான விளையாட்டாளர் என்ற பெருமையை இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி இணையர் பிரிவில் அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எஃப்டன் உடன் இணைந்து இத்தாலி அணியினரை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் போபண்ணா இணையர் 7-6 (0), 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர். தற்போது போபண்ணாவிற்கு 43 வயதாகின்றது. இந்த வயதிலும் விளையாட்டுத் திறனையும் உற்சாகத்தையும் அவர் தொடர்வதாக விளையாட்டு விமர்சகர்கள் மட்டுமன்றி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமது உற்சாகம் குறித்து விவரித்த போபண்ணா, நான் இங்கு வந்த நாள் முதல் தினமும் ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட நீரில் சிறிது நேரம் அமர்வேன். இதன்மூலம் நான் என் உடலை உற்சாக நிலைக்கு திருப்ப முடிகின்றது. இந்த முறையானது எனது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமன்றி புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.
நான் உடற்பயிற்சி கூடத்திற்கு .செல்வதையெல்லாம் நிறுத்தி விட்டேன். நிறைய யோகாப் பயிற்சிகளை மேற்கொள்கின்றேன். எனது வயது காரணமாக தினமும் இரவு 8 மணிக்குள் தூங்கி விடுகின்றேன். என்ன நடந்தாலும் சரி அதிகாலையிலேயே எழுகின்றேன் என அவர் கூறியுள்ளார்.









