பெட்டாலிங் ஜெயா:
பேராக் மாநிலத்திலுள்ள பீடோர் தற்காலிக குடியேற்ற தடுப்பு முகாமிலிருந்து 131 சட்டவிரோத குடியேறிகள் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து, தீர விசாரிக்க ஒரு சுயேச்சை புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சட்ட, நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மியன்மாரைச் சேர்ந்த அந்த 131 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக நேற்று குலசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் “சட்டவிரோதக் குடியேறிகள் தப்பிச் சென்ற சம்பவம் இப்போதுதான் நடைபெற்றுள்ளதா அல்லது கடந்த காலத்தில் இதேபோன்று நடந்துள்ளதா என்று உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
“விசாரணை மூலம் காரணம் தெரிய வந்தால் வருங்காலத்தில் இதேபோன்ற சம்பவங்களைத் தடுத்த நிறுத்த உதவும்.
“பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற, சுயேச்சைக் குழு ஒன்று பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்,” என்று குலசேகரன் தெரிவித்து உள்ளார்.