பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில் 11,127 பேருக்கு டிங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.
இவ்வாண்டின் முதல் ஐந்து வாரங்களில் இந்த எண்ணிக்கை 65.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் 18,247 பேருக்கு டி ங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் முகம்மது ரட்ஸி அபு ஹசான் தெரிவித்தார்.
டிங்கிக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஒன்பதாக உயர்ந்துள்ளது மிகவும் கவலைக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது மலேசியாவில் 180 இடங்கள் டிங்கியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 143 இடங்கள் சிலாங்கூரிலும் 20 இடங்கள் கோலாலம்பூரிலும், புத்ராஜெயாவில் ஏழு இடங்கள், நெகிரி செம்பிலானில் நான்கு இடங்கள், பேராக்கில் மூன்று இடங்கள் மற்றும் பினாங்கு, பாகாங், சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் தலா ஓர் இடமும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.