திவாலான மாலத்தீவு.. இந்தியா வைத்த ‛செக்’..

­மாலே: இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் மாலத்தீவின் வருமானம் என்பது பெரிய அளவில் சரிந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் மாலத்தீவு திவாலாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த நாடு உதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின் வருமானம் என்பது சுற்றுலாத்துறையை சார்ந்தே இருக்கிறது. மாலத்தீவில் உள்ள கடற்கரைக்கு இந்தியா உள்பட பிற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு படையெடுப்பார்கள். இத்தகைய சூழலில் தான் கடந்த ஆண்டு முதல் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதாவது மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் இந்திய ஆதரவு அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார். அவரை பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வீழ்த்தி வெற்றி பெற்று அதிபரானார். இந்த முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். அதோடு சீனா ஆதரவாளர். இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி தான் பிரசாரம் செய்து வாகை சூடினார்.

அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சென்று போட்டோ வெளியிட்டார். மாலத்தீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ப்ரோமோட் செய்வதாக அந்நாட்டு அமைச்சர்கள், எம்பிக்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இது இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தியது.

இதனால் இந்தியர்கள் கடும் கோபமடைந்தனர். மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். இதனால் பயந்துபோன மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராக கருத்த தெரிவித்த 3 அமைச்சர்களை சஸ்பெண்டும் செய்தார். இருப்பினும் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை குறைத்து கொண்டனர். இதனால் மாலத்தீவின் வருமானம் மளமளவென குறைந்தது.

இதையடுத்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவுக்கு பயணம் செய்து அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். தனது நாட்டுக்கு இந்தியர்கள் வருவது சரிந்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிளை அனுப்பி வைக்க வேண்டும் என கூறினார். இத்தகைய சூழலில் தான் தற்போது மாலத்தீவு திவாலாகி உள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது நாடு திவால் நிலையில் உள்ளதாக மாலத்தீவு சார்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் , தங்கள் நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்க பொருளாதார ரீதியிலான கடன் உதவிகளை வழங்கும்படியும் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here