கூச்சிங்:
இன்று (பிப். 21) காலமான முன்னாள் சரவாக் ஆளுநர் துன் அப்துல் தைப் மஹ்மூட்டின் மறைவையொட்டி, சரவாக் மாநிலத்தில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
புதன் (பிப்.21) மற்றும் வியாழன் (பிப்.22) ஆகிய நாட்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
87 வயதான தைய்ப், இன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று பிற்பகல் 1 மணியளவில் கூச்சிங்கிற்கு கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு டெமாக் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர் அவரின் உடல் நாளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சரவாக் மாநிலச் சட்டமன்றத்திற்கு இறுதி மரியாதைக்காக எடுத்துச் செல்லப்படும்.
மேலும் அவரது உடல் நாளை ஸுகூர் தொழுகைக்குப் பிறகு அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள டெமாக் ஜெயா முஸ்லீம் ஈமக்கொல்லையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.




















