கோலாலம்பூர்:
தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகம் முழுக்க ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.
1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1999-ம் ஆண்டு அனைத்துலக தாய்மொழி தினத்தை யுனெஸ்கோ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி அனைத்துலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அனைத்துலக தாய்மொழி தினத்திற்கான தீம்-“பலமொழி கல்வி” ஆகும்.
“பாரம்பரியம் பற்றிய அறிவு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான வழித்தடங்களாக செயல்படும் தங்களது மொழிகளை பாதுகாப்பதன் மூலம் பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் செழித்து வளர முடியும்.”
“பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. தற்போது, உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வசதிகளை பெற முடிவதில்லை. மேலும், இது குறிப்பிட்ட பகுதிகளில் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது,” என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் 14ஆவது அனைத்துலக தாய்மொழி தின கொண்டாட்டம் கோலாலம்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
டேவான் பகாசா புஸ்தாகாவின் வாரியத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அனுவார் இதனை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









