அலோர் ஸ்டார்:
இந்த ஆண்டு லங்காவிக்கு மூன்று மில்லியன் பார்வையாளர்கள் வருவார்கள் என்ற இலக்கை அடைய கெடா மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்தாண்டு ஜனவரி 31 வரை மொத்தம் 206,443 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தாண்டுக்கான இலக்கை அடைய முடியும் என்று மாநில அரசு நம்புகிறது என்று, மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் தொழில் முனைவோர் குழுவின் தலைவர் டத்தோ முகமட் சாலே சைடின் கூறினார்.
கெடா மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் லங்காவி மேம்பாட்டு சபை (LADA) மூலம் மாநில அரசு, புதிய வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் லங்காவிக்கான அணுகலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
“மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விமான ஊக்குவிப்புத் திட்டமும் வழங்கப்படுகிறது. இதுவரை சீனாவின் செங்டு மற்றும் சோங்கிங்கிலிருந்து லங்காவிக்கு மொத்தம் 1080 பயணிகளுடன் ஆறு சிறப்பு விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன,” என்று அவர் கெடா மாநில சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 5) தெரிவித்தார்.





















