மியாமி பொது டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். தொடர்ந்து முன்னேறிய இந்த ஜோடி, நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், செம் வெர்பீக்(நெதர்லாந்து)- ஜான் பேட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் தொடக்கத்தில் போபண்ணா-எப்டன் ஜோடி, அடுத்தடுத்து தவறுகள் செய்ததால் முதல் செட்டை இழந்தது. அதன்பின், சிறப்பாக ஆடிய இவர்கள், 3-6, 7-6 (4), 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மார்செல்-ஹோராசியோ, லாயிட் கிளாஸ்பூல்-ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் ஜோடியுடன், போபண்ணா-எப்டன் ஜோடி பலப்பரீட்சை நடத்த உள்ளது. உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போபண்ணாவுக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் முதல் 10இல் தொடர்ந்து நீடிக்கவும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவும் உதவும்.









