ஷா ஆலம்:
சிலாங்கூரின் பந்திங்கில் இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் பட்டாசு வெடித்ததற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 வயதான அந்த ஆடவர் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பந்திங்கில் கைது செய்யப்பட்டதாக கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அஹ்மட் ரித்வான் முகமட் நோர் சாலே கூறினார்.
மேலும் குறித்த சந்தேக நபர் ஊர்வலத்தில் பங்குபற்றிய இன்னும் பல மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுடன் இணைந்து, சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி சில பட்டாசுகளை வெடித்ததாக அவர் கூறினார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் ஆம்பெடமைன் மற்றும் மெத்தாம்பேட்டமைன் ஆகியவற்றை பாவித்திருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
“தற்போது பந்திங் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு, போக்குவரத்து குற்றங்களுக்காக முன்னர் மூன்று சம்மன்கள் விதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் நேற்று (மார்ச்28) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் தேடி வருவதாக அஹ்மட் ரித்வான் கூறினார்.
வெடிபொருள் சட்டம் 1957ன் பிரிவு 8ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





















