கடவுள்களுக்கு நாம் பல விதமான பழங்களை படைத்து வழிபட்டாலும், இந்த ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியவையாகும். நமக்கு என்ன தேவையோ அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும், அதற்குரிய பழங்களை கடவுள்களுக்கு படைத்து வழிபடலாம். கோவிலுக்கு என்ன பழத்தை நைவேத்தியமாக படைப்பதற்கு வாங்கிக் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்த கொள்ளலாம்
கோவிலுக்கு செல்லும் முறை :
கோவிலுக்கு செல்லும்போது பலரும் வெறும் கையுடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் தவறான செயலாகும். கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக அந்த தெய்வத்திற்குரிய மலர், அர்ச்சனை பொருட்கள், நிவேதனப் பொருட்கள் என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாக வாங்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் போது இரண்டு வில்வ இலைகளையாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதே போல் பெருமாள் கோவிலுக்கு செல்வது என்றால் சிறிதளவாவது துளசி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
தெய்வங்களுக்கு படைக்கும் பழங்களும், பலன்களும் :
* வாழைப்பழம் – வாழைப்பழத்திற்கு கதளிப்பழம் என்றொரு பெயர் உண்டு. கதளி என்பவள் துர்வாச முனிவரின் மனைவி. துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாகி உயிரை விட்ட கதளியை கண்டு அவரது தந்தை கதறி அழுகிறார். இதைக் கண்டு மனம் வேதனையடைந்த துர்வாச முனிவர், கதளியை மரமாக மாற்றி விட்டதாக புராணங்கள் சொல்கின்றன. வாழை மரமானது விதையில் இருந்து தோன்றாதது. இதனால் எச்சில் படாத, தீட்டு இல்லாத புனிதமான பழமாக கருதப்படுகிறது. இதனாலேயே அனைத்து தெய்வங்களின் வழிபாட்டிற்கும் ஏற்றதாக வாழைப்பழம் படைக்கப்படுகிறது. தெய்வத்திற்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தீர்க்க ஆயுள், நோய் நொடி இல்லாத வாழ்க்கை அமையும். நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும்.
செல்வத்தை தரும் பழங்கள் :
* மாதுளை – மாதுளை மனதிற்கு புத்துணர்ச்சியை தரக் கூடிய பழமாகும். இதை தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் போது வெற்றி கிடைக்கும். பெண் தெய்வங்களுக்கு மாதுளை படைத்து வழிபட்டால் மலட்டுத் தன்மை நீங்கி, குழந்தைப்பேறு வாய்க்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் நிறைந்திருக்கும்.





















