கோலாலம்பூர்: ‘அல்லா’ என்ற வாசகம் கொண்ட காலுறை விற்பனையின் சமீபத்திய சர்ச்சை தொடர்பாக அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை (IP) சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் ஐந்து நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமட் அக்மலின் வாக்குமூலத்தை போலீசார் நேற்று பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை ஆவணம் அடுத்த வாரம் ஏஜிசியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். நேற்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விசாரணை ஆவணம் முடிக்கப்படுகிறது என்று பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது அவர் சுருக்கமாக கூறினார்.
தேச துரோகச் சட்டம் 1948 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக முகமது அக்மல் கோட்டா கினாபாலு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்பதை நேற்று ரஸாருதீன் உறுதிப்படுத்தினார். முகமது அக்மல் நேற்று தனது அதிகாரபூர்வ முகநூல் மூலம் தலைநகரில் உள்ள டாங் வாங்கி IPD யில் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சபா கோத்த கினபாலு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD) போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.