உயிர் குடிக்கும் கக்குவான் இருமல்: பல நாடுகளில் வேகமாக பரவுகிறது

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கக்குவான் இருமல் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ், செக் குடியரசு, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ‘பெர்டுசிஸ்’ என்று அழைக்கின்றனர். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த கக்குவான் இருமலுக்கு பலியாகின்றனர்.

சீனாவில், இந்த ஆண்டில் 32,380 பேருக்கு கக்குவான் இருமல் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகம். ஜன., முதல் மார்ச் வரையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த ஆண்டை விட, நோய்த்தொற்று 34 மடங்கு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கக்குவான் இருமல், மிகவும் வேகமாக பரவக்கூடிய தொற்றுநோய். ‘போர்டெடெல்லா பெர்டுசிஸ்’ என்ற தொற்றுக் கிருமியின் வாயிலாக இது பரவுகிறது. நுரையீரலின் மேல்பகுதியை தாக்குகிறது. அந்த தொற்றில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை, மூச்சுக் குழாயில் தடிப்பை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

இது, ஆரம்பத்தில் சாதாரண ஜலதோஷம் போலத்தான் ஆரம்பிக்கும். மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். இந்த நேரத்தில் தொற்று பரவலை கண்டறிவது கடினம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அறிகுறிகள் தீவிரமடையும். மிக அதிகமான, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருமல் அதிகரிக்கும். இது 10 வாரங்கள் வரை நீடிக்கும்.
குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பதின்பருவத்தினர், பெரியவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. இரவு நேரங்களில் மட்டும் துாங்க முடியாத அளவு இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெரியவர்களுக்கு அறிகுறிகள் பெரிதாக தென்படவில்லை என்றாலும், அவர்கள் குழந்தைகளுக்கு தொற்றை பரப்புவதால், இது அதிக ஆபத்தில் முடிகிறது.

என்ன சிகிச்சை?

இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், ‘ஆன்டிபயாடிக்’ வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடிப்பவர்களுக்கு, ஆன்டிபயாடிக் வழங்கப்படுவதில்லை. காரணம், அவர்களின் உடலில் உள்ள தொற்று வெளியேறி இருக்கும் என கூறப்படுகிறது. மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி உள்ளதா?

சீனாவில் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. அமெரிக்காவில், 7 வயது வரையானவர்களுக்கு, 7 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனியாக தடுப்பூசிகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here