சிட்னி:
கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூன் 8ஆம் தேதியன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 13 பேரை மீட்டதாக நியூ சவுத் வேல்ஸ் அவசரகாலச் சேவைகள் அதிகாரிகள் கூறினர்.
உதவி கேட்டு 297 அழைப்புகள் கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிட்னியின் வடமேற்குப் பகுதியில் உள்ள பத்து குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடக்கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
கனமழை காரணமாக சிட்னியில் நீர்நிலைகள் நிரம்பிவிட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அவசரகாலச் சேவைகள் அமைச்சர் ஜிஹாத் டிப் கூறினார்.
























