கூலிம் தமிழ்ப்பள்ளி குறுக்கோட்டப் போட்டி 470 மாணவர்கள் பங்கேற்பு

கே. ஆர். மூர்த்தி

கூலிம், ஏப். 13-
கூலிம் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவில் நடத்தப்பட்ட 2024-2025 ஆண்டுக்கான குறுக்கோட்ட விளையாட்டுப் போட்டியில் 470 மாணவர்கள் பங்கு பெற்றதாக பள்ளியின் மாணவர் நல துணைத்தலைமையாசிரியர் எம். இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இப்பள்ளியில் காலை, மதியம் இரு வேளையும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் ஆதரவோடு பள்ளியின் புதிய தலைமையாசிரியர் ஜூலியனா பெரியநாயகம் தலைமையில் இந்த குறுக்கோட்டப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டி மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஆண்டு என்று ஒவ்வோர் ஆண்டிலும் மாணவர்கள் ஒரு பிரிவிலும் மாணவிகள் ஒரு பிரிவிலும் என்று எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இந்தக் குறுக்கோட்டப் போட்டியில் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு 2.8 கிலோ மீட்டர் தூர ஓட்டமும் ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூர ஓட்டமும் வழங்கப்பட்டது.

பள்ளியின் பிரதான வாசலிலிருந்து தொடங்கப்பட்ட இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் இறுதியில் மீண்டும் பள்ளியின் பிரதான வாசலில் இப்போட்டியை வெற்றிகரமாக முடித்தனர்.

எட்டுப் பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 25 மாணவர்களுக்கு அதாவது 200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதில் ஒன்று முதல் ஐந்து வரை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் 6 முதல் 25 வரை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.

இப்போட்டியை பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஜூலியனா பெரியநாயகம், பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் எம். மகேந்திரன், மாணவர் நல துணைத்தலைமையாசிரியர் எம். இராமச்சந்திரன், இணைபாட துணைத் தலைமையாசிரியர் தினமணி, துணைத்தலைமையாசிரியர் சித்ரா, மாலை பள்ளி துணைத்தலைமையாசிரியர் இந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

கூலிம் மாவட்ட தலைமை காவல் துறையை சேர்ந்த பள்ளி தொடர்பு அதிகாரி, பள்ளி மேலாளர் வாரியக்குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here