இப்படியும் ஒரு கொடூரத் தந்தை

­தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 31). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனி மலேசியாவிற்கு வேலைக்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் மது அருந்த பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த அவர், அவ்வப்போது தனது மகளின் கையை பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்து அவரிடம் பணம் கேட்டுள்ளார்.

வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து மலேசியாவில் இருந்து அதிராம்பட்டினத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறினார். பின்னர், போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்து குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவியை சொந்த ஊருக்கு வரவழைக்க தான் பெற்ற குழந்தையை துன்புறுத்தி வீடியோவாக எடுத்த இந்த கொடூர தந்தையின் செயல் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here