கோலாலம்பூர்:
மலேசியாவில் நோன்புப் பெருநாள் பாடல்களைளுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களைக் கொண்டு வாசித்து பலரது கவனத்தை ஓர் இசைக் குழு ஈர்த்துள்ளது.
சாய் நாக உருமி மேளம் எனும் தாள வாத்திய இசைக் குழுவைச் சேர்ந்த இளையர்கள் ‘சுவாசானா ஹரி ராயா’, ‘செலோக்கா ஹரி ராயா’ ஆகிய பாரம்பரிய ரமலான் பாடல்களுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களை வாசித்திருப்பது, சமூக ஊடகங்களில் இருக்கக்கூடிய இன ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தணிக்க இக்குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய் நாக உருமி மேளம் முதன்முறையாக இந்த முயற்சியில் ஈடுபட்டது.
டிக்டாக் தளத்தில் இரண்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்தது. அவற்றின் மூலம் பல மலேசியர்களின் இதயத்தைத் தொட்டது.
குறிப்பாக அண்மையில் நோன்புப் பெருநாள் கொண்டாடிய முஸ்லிம் சமூகத்தினரை அந்தக் காணொளிகள் கவர்ந்தன.
அதனைத் தொடர்ந்து தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் படைப்புகளை வழங்குமாறும் சிலர் சாய் நாக உருமி மேளக் குழுவைக் கேட்டுக்கொண்டனர்.
“ஏதேனும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சாய் நாக உருமி மேளக் குழுவுக்கு இருந்தது. அந்த வகையில் இசை அனைவரையும் இணைக்கும் என்று நாங்கள் நம்பினோம். குறிப்பாக நோன்புப் பெருநாள் காலத்துக்கு இது பொருந்தும்,” என்று அந்தக் காணொளிகளில் இடம்பெற்றுள்ள தவில் வாசிப்பாளரான 22 வயது லோகேஸ்வரன் கூறினார்.