சென்னை: இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கேபி ஜெயக்குமார் மாயமானதாக வெளியான தகவல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: இந்நிலையில் ஜெயக்குமார் தனசிங், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையின் அலட்சியப்போக்கு: குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்த 30 ஆம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
ஏவல்துறை: பலமுறை சுட்டிக்காட்டியும், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக, தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின்: எனவே, இனியாவது பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு, திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.




















