கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடலில் மூழ்கி ஆன்மிக சுற்றுலா வந்த இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அடுத்தடுத்து கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. லெமூர் கடற்கரையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் இன்று காலை கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் குளச்சல் அருகே சுற்றுலா பயணிகள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சென்னை சூளைமேடு மற்றும் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் ஆன்மிக சுற்றுலாவாக புறப்பட்டு திருச்சி, மதுரை வழியாக நேற்று இரவு கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் இரவு கன்னியாகுமரியில் தங்கிவிட்டு இன்று காலை குளச்சல் அருகே கோடிமுனை என்ற ஊருக்கு வந்தனர்.
அங்கே கடற்கரையில் சிறிது நேரம் தங்கி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். மதியம் சாப்பாட்டிற்காக பெண்கள் கோடிமுனையில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடன் வந்திருந்த சூளைமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழ் சோனியாவின் கணவர் வெசீஸ்(54), பள்ளி தேர்வு வெளியீடு பிரிவில் (டி.பி.ஐ) வேலை பார்க்கும் வாலிபர் மனோஜ்குமார் (25) உள்பட 6 பேர் அங்குள்ள தூண்டில் வளைவு கற்களில் ஏறி கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் ஆர்வ மிகுதியில் தூண்டில் வளைவு அருகில் உள்ள பாறை மீது ஏறி நின்றனர். அப்போது அங்கு திடீரென எழுந்த அலை பாறை மீது நின்றிருந்தவர்கள் மீது மோதி அவர்களை நிலைதடுமாறச் செய்தது.
இதில் அவர்கள் 6 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதனை அறிந்த கோடிமுனை மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளில் சென்று அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் வெசீஸ் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்த தகவலறிந்த குளச்சல் மரைன் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் தங்களோடு வந்த இருவர் கடலில் மூழ்கி இறந்து போனதால் சென்னை வாசிகள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.