பைத்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் 19 பள்ளிகள் சேதம்

பெலுரான்:

பைத்தான் (Paitan) பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் 19 பள்ளிகளைப் பாதித்துள்ளது.

இதில் SK Bawang K9 பள்ளி வெள்ளத்தில் மூழ்கியதில், பள்ளி உடைமைகள் அனைத்தும் பலத்த சேதமடைந்துள்ளன.

பள்ளியின் பாதுகாப்பு காவலர் முக்சின் மஜம்பு (49) கூறுகையில், பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு தொடங்கிய கனமழை மறுநாள் வரை நீடித்ததாக நினைவு கூர்ந்தார்.
“அதிகாலையில் நானும் எனது நண்பரும் பள்ளியில் பணியில் இருக்க வேண்டியிருந்தது, அதனால் அன்றிரவு சீக்கிரமாகவே வந்துவிட்டோம். மழை நிக்கவே இல்லை, நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் இவ்வளவு பெரிய வெள்ளத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இங்கே நான் பணியாற்றும் 11 ஆண்டுகளில், பள்ளி முழுவதுமாக மூழ்கும் அளவுக்கு இவ்வளவு கடுமையான வெள்ளத்தை நான் பார்த்ததே இல்லை,” என்று அவர் கூறினார்.

வெள்ளம் சூழந்தபோது, புத்தகங்கள், பள்ளி உபகரணங்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்களை உயர்ந்த இடத்திற்கு மாற்றியதாக அவர் தெரிவித்தார். நள்ளிரவில் ஆசிரியர்கள் அறைக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு படகைப் பயன்படுத்தி, ஊழியர் குடியிருப்பில் சிக்கித் தவித்த இரண்டு ஆசிரியர்களை அதிகாலை 4 மணியளவில் மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முக்சின் கூறினார்.

மூன்றாம் நாளில்தான் வெள்ள நீர் முழுமையாக வடிந்து துப்புரவுப் பணிகளைத் தொடங்க முடிந்ததாகக் கூறிய அவர், இந்தச் சம்பவத்தினால் தாம் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏற்பட்ட சேதங்களைக் கண்டு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

“புத்தகங்கள், கணினிகள், கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படும் தொலைக்காட்சிகள் மற்றும் இதர உபகரணங்களை இனி பயன்படுத்த முடியாது. பள்ளி மேஜை, நாற்காலிகளும் சேதமடைந்துள்ளன,” என்றார்.

இதற்கிடையில், பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி ஜூலை ஜாண்டிங் (40) கூறுகையில், பள்ளி விடுமுறையின் போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், நாளை (பிப்ரவரி 24) பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளதால் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

2024-இல் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய கட்டிடம் அழிந்த பிறகு, புதிய கட்டிடத்தில் ஒரு வருடமாக இயங்கி வந்த தங்கராசன் சுகாதார மருத்துவமனை (Tangkarason Health Clinic), தற்போது மீண்டும் ஒரு பேரிடரைச் சந்தித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் மருத்துவமனையின் கூரை வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தங்கராசன் சுகாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜொஹ்மென் மசண்டு கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்பு 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

“மூன்று வாகனங்கள், தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் முழுமையான இழப்பாகக் கருதப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை இன்னும் முழுமையான வசதிகளுடன் (எக்ஸ்ரே போன்றவை) செயல்படத் தொடங்காத நிலையிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உபகரணங்களை விரைவாக மாற்றவும், மருத்துவ விநியோகங்களை துரிதப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்காலிகமாக, இந்த மருத்துவமனை கிராம மண்டபத்தில் (Village Hall) இருந்து செயல்படும் என்றும், அங்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பெலுரான் சுகாதார அலுவலகம் மற்றும் தெலுபிட் சுகாதார மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து மருந்து விநியோக உதவியைப் பெற்று, நோயாளிகளுக்கான சிகிச்சைத் தொடர்ச்சியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here