சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர், தொடையில் மறைத்து கடத்தி எடுத்து வந்த ரூ.1.03 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 424 கிராம் எடையுள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தங்கம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை கடத்தி வரும் கும்பல்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நூதன முறைகளில் கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் போதைப் பொருள் ஆகியவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்கிடமான பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வருகை தந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது தொடைப் பகுதியில், கால் முட்டிக்கு அணிவிக்கும் ‘கேப்’ (knee cap) போன்று அணிந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.


பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 424 கிராம் தங்கத்தின் சர்வதேச விலை, ஒரு கோடியே 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.