ஒரே நாளில் 3 உலக சாதனை – அசத்திய ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 உலக சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரோகித் சர்மாவை காரணமின்றி ‘ஹிட்மேன்’ என்று அழைப்பதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். செயிண்ட் லூசியாவில் நடந்த சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மோசமாக துவம்சம் செய்தார். ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சை சிதறடித்த ரோகித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜம்பா போன்றவர்கள் வீசிய பந்துகளையும் பறக்க விட்டார்.

41 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, 224.39 ஸ்டிரைக் ரேட் உடன் வெளியேறினார். நேற்றைய போட்டியின்போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும், அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இத்துடன், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையை அவர் தகர்த்தெறிந்தார்.

ரோகித் சர்மா 157 சர்வதேச டி20 போட்டிகளில் 4,165 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், 123 சர்வதேச டி20 போட்டிகளில் 4,145 ரன்கள் எடுத்திருந்த பாபர் ஆசமை பின்னுக்குத் தள்ளினார். இதன் மூலம், இராண்டவது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், 123 போட்டிகளில் 4,103 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரே அணிக்கு எதிராக மூன்று விதமான கிரிகெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை ரோகித் படைத்துள்ளார். ரோகித் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 132 சிக்சர்களை அடித்துள்ளார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல் 130 சிக்சர்களை அடித்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here