கெந்திங் ஹைலேண்ட்ஸ் விபத்து: உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக பேருந்து ஓட்டுநர் ஆனந்த குமார் மீது குற்றச்சாட்டு

ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் கடந்த ஜூன் 29ஆம் தேதி இரண்டு சீன பிரஜைகளின் மரணத்திற்கு காரணமான சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கு செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில்  குற்றமற்றவர் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினார். சிலாங்கூர் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆனந்த் குமார் 32, மாஜிஸ்திரேட் சித்தி ஐஸ்யா அஹ்மத் முன் மனு செய்தார்.

முதல் குற்றச்சாட்டின்படி கடந்த ஜூன் 29 காலை 10.20 மணியளவில் பெந்தோங்      16.5ஆவது கிலோ மீட்டர் ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் (கீழ்நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஜாங் பிங் 58, வாங் சுஹாங் 49 ஆகியோர் உயிரிழப்பின் போது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும். அதே நாள் மற்றும் நேரத்தில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பேருந்தை ஓட்டியதற்காக அதே சட்டத்தின் பிரிவு 26 (1) இன் கீழ் அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனந்த் குமார் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் அவருக்கு ஒரு உத்தரவாதத்துடன் 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கியது மற்றும் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தொ வைத்தது.  இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் முஹம்மது ஜம்ஹரிர் முஹம்மது ஜூஹித் நடத்தினார். கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடந்த விபத்தில் கெந்திங் ஹைலேண்ட்ஸின் KM 16.5 இல் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் 19 பயணிகள் மீட்கப்பட்ட வேளையில் இரண்டு சீனர்கள் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here