சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி, விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு தமிழகத்தில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.
எனினும் பீட்டா அமைப்பு முயற்சியைக் கைவிடவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி ஓராண்டுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அந்த மனு மீதான விசாரணை இதுவரை தொடங்க வில்லை. எனவே, சீராய்வு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
பின்னர் வழக்கு விவரங்களை மின் அஞ்சலில் அனுப்ப பீட்டா தரப்புக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.