இந்துகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களையும் பெரிய சங்கமாக மலேசிய இந்து சங்கம் செயலாற்றி வருகிறது. ஆனால் சங்கம் நடுநிலையாக செயல்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியே?. ஏனெனில் சில மாதங்களாக சங்கத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறிய வருவதாக விலாயா மாநில செயலவை உறுப்பினர்கள் சார்பில் மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி கருணன் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பழைய நிர்வாகம் முறையாக செயல்படவில்லை என்று விலாயா மாநிலத்தின் உள்ளிட்ட சில மாநிலங்களின் ஆதரவை பெற்று புதிய நிர்வாகம் சங்கத்தை மீட்டெடுத்தது.
ஆனால் தற்பொழுது பழைய நிர்வாகத்தோடு கைகோர்த்து கொண்டு புது நிர்வாகம் சமரசம் செய்து கொண்டதாக கூறும் போது விலாயா மாநிலத்தின் நிலைப்பாடு என்ன என்று தங்களுக்கு தெரியவில்லை.
2 வட்டாரத்தில் ஏற்பட்ட உட்பூசலுக்கு மாநிலத்திடம் கலந்தோசிக்காமல் தேசியமே முடிவு செய்தது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாநிலத்திற்கு பொறுப்பினை வழங்கிய பின் தேசியத்தின் நேரடி தலையீடு ஏற்புடையதல்ல. பழைய நிர்வாகமும் புதிய நிர்வாகமும் கைகோர்த்து கொண்ட வேளையில் விலாயா மாநிலத்தின் நிலைப்பாடு குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையில் தேசியத்தில் முக்கிய பதவியில் இருப்பவரை பதவி நீக்கம் செய்திருப்பதாகவும் அறியப்படுகிறது. அவர் மாநிலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் வளர்ச்சிக்காக அவர் பல்வேறு உதவிகளை அயராமல் வழங்கி வந்தவர். அவர் நீக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.









