மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் சங்கிலியால் கட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் கார்ட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவரி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் தமிழகம் விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.அவரது அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் அருகிலேயே இருந்துள்ளது. மேலும் ஆதார் கார்ட் ஒன்றும் அதில் இருந்துள்ளது. அந்த ஆதார கார்ட்டில் தமிழ்நாட்டு முகவரி இருந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காடு: சோனூர்லி என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டில் சனிக்கிழமை மாலை ஒருவர் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவரின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அந்த குரலை கேட்டு அங்கு சென்றபோது பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளார். அவர் மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்ததும் பதறிய அந்த நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், அந்தப் பெண்ணை அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிறகு மேல் சிகிச்சைக்காக சிந்துதுர்க்கில் உள்ள ஓரோஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மனநலம் மற்றும் உடல்நிலையை இரண்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதால் இப்போது சிகிச்சைக்காகக் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்து: அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மனநிலை பாதிப்புகளும் இருக்கிறது. அவர் இருந்த இடத்திற்கு அருகிலேயே அவரது ஆதார் கார்டு இருந்துள்ளது. அதில் தமிழ்நாட்டு முகவரி இருந்துள்ளது. மேலும், அவரது அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகலும் அங்கே இருந்துள்ளது. வேறு சில ஆவணங்களும் அங்கே இருந்தன. அதைக் கைப்பற்றி இருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லலிதா கயி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது விசா காலாவதியாகிவிட்டது. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தை இது தொடர்பாகத் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.
முதற்கட்ட விசாரணை: முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் இல்லை. இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததாலும், அந்தப் பகுதியில் கனமழை பெய்ததாலும், அந்தப் பெண் மிகவும் பலவீனமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த எவ்வளவு நாள் அங்கே அப்படியே கட்டி வைக்கப்பட்டு இருந்தார். அவரை கட்டி வைத்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரது கணவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவரை தான் இந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு ஓடியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம் விரைந்த போலீஸ்: அடுத்தகட்ட விசாரணைக்காக போலீஸ் டீம் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மேலும், மற்றொரு டீம் கோவாவுக்குச் சென்றும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. அந்த ஆதார் கார்ட்டில் இருக்கும் முகவரிக்கு வந்து போலீசார், அந்த பெண் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.





















