சிகாகோ: அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கே ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய ஹிலாரி கிளிண்டன் மிகக் கடுமையாக டிரம்பை சாடினார். ஜனநாயக கட்சியினர் டிரம்பை ஓடவிட்டு இருப்பதாகத் தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், இந்த தேர்தலில் வென்று கமலா ஹாரிஸ் வரலாறு படைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இப்போது அங்கே ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மாநாடு: இந்த மாநாட்டில் ஜனநாயக கட்சியின் தலைவர்கள் அதிபர் பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா எனப் பல தலைவர்கள் உரையாற்றினர். இதற்கிடையே இந்த மாநாட்டில் பேசிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மிகக் கடுமையாக டிரம்பை விமர்சித்தார். கமலா ஹாரிஸை பாராட்டிய அவர், ஜனநாயக கட்சியினர் இணைந்து டிரம்பை ஓடவிட்டதாகவும் சாடினார்.
ஹிலாரி கிளிண்டன்: இந்த மாநாட்டில் பேசிய ஹிலாரி கிளிண்டன், “கமலா ஹாரிஸ் நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது அக்கறை கொண்ட ஒரு தலைவர்.. அமெரிக்கா மீது அக்கறை கொண்ட தலைவர்.. ஆனால், டிரம்பை பாருங்கள். அவர் ஒரு சுயநலவாதி.. தான் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே டிரம்பின் கவலை..
கமலா ஹாரிஸ் முதலில் நீதிமன்றத்தில் வேலை செய்தது அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் பதவியேற்கும் போது கமலா ஹாரிஸ், மக்களுக்காக பணியாற்றுவேன் (Kamala Harris, for the people) என்று கூறியே பதவியேற்றுக் கொண்டார். இந்த வார்த்தைகள் அவரை இனியும் வழிநடத்தும். ஆனால், டிரம்ப் இதையெல்லாம் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார். இதன் காரணமாகவே கமலா ஹாரிஸ் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்.
ஓடவிட்டுள்ளோம்: என்ன பேசுவது என்றே தெரியாமல் கமலா ஹாரிஸ் பெயரைப் பாருங்கள், சிரிப்பைப் பாருங்கள் என்று ஏதேதோ உளறிக் கொண்டு இருக்கிறார். உண்மையில் நாம் ஜனநாயக கட்சியினர் எல்லாம் சேர்ந்து அவரை ஓடவிட்டுள்ளோம்” என்றார். மேலும், டிரம்ப் மீது இருக்கும் வழக்குகள், அதை அவர் எதிர்கொண்ட விதம் குறித்தும் ஹிலாரி பேசினார். அப்போது டிரம்பை கைது செய்யுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கோஷமிட்டனர்.
அடுத்துச் சொன்ன வார்த்தை: அவர் மேலும் பேசுகையில், “தனது சொந்த விசாரணையிலேயே தூங்கியவர் தான் டிரம்ப்.. தூங்கி எழுந்திருக்கும் போது 34 குற்றச் செயல்களுடன் அதிபர் பதவிக்கும் போட்டியிடும் நபர் என்ற மோசமான சாதனையை டிரம்ப் படைத்திருந்தார். சர்வே முடிவுகள் இப்போது நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால், அதனால் நாம் ஓய்வெடுக்கக் கூடாது. சதி மூலம் நம்மை வீழ்த்த முயல்கிறார்கள். நாம் அதை உண்மை கொண்டு போராட வேண்டும். கமலா ஹாரிஸுக்காக போராட வேண்டும். நமது நாட்டிற்காகப் போராட வேண்டும்.
உடைக்கவே முடியாது என்று சொன்னதை உடைத்துள்ளோம். கமலா ஹாரிஸ் இப்போது உயர்ந்து வருகிறார். அவர் விரைவில் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்கப் போகிறார். அதை யாராலும் தடுக்க முடியாது. அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றைக் கமலா ஹாரிஸ் படைக்கப் போகிறார். என்னால் செய்ய முடியாததை அவர் செய்யப் போகிறார். நமது எதிர்காலம் இங்கே தான் இருக்கிறார். அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெல்வது உறுதி” என்றார்.



















