தண்டவாளத்தில் தலை வைத்து உறங்கிய ஆடவர்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தின்மீது தலை வைத்துத் தூங்கிய ஆடவரால் அவ்வழியாக வந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பிரயாக்ராஜ் நகரிலிருந்து பிரதாப்கர் நகருக்குச் செல்லும் பாதையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பயன்பாட்டில் உள்ள ரயில் தண்டவாளத்தின்மீது தலை வைத்து ஆடவர் ஒருவர் படுத்திருப்பதை அந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது. அவருக்குப் பின்னால் நிழலுக்காக ஒரு குடை விரிக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

அவ்வழியாக வந்த ரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் உறங்கிய ஆடவரைக் கண்டதும் ரயிலை நிறுத்திவிட்டு அந்த ஆடவரை அணுகி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை எழுப்பி, நகரச் சொல்லிவிட்டுப் பின்னர் ரயிலை ஓட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை ரயில் ஓட்டுநர் கவனிக்காமல் சென்றிருந்தால் அந்த ஆடவர் உயிரிழந்திருப்பார்.

ரயில் ஓட்டுநரே காணொளியைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இணையவாசிகள் பலரும், ரயில் ஓட்டுநரின் செயலைப் பாராட்டியுள்ளனர். அதேநேரம், நிழலுக்காகக் குடையை விரித்துப் படுத்த ஆடவருக்கு ரயில் வரும் என்று தோன்றாதது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் விபத்துகளுக்கு ரயில்வே துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று பலர் குற்றஞ்சாட்டும் வேளையில், இதுபோன்ற மனிதர்களின் பொறுப்பற்ற செயலும் விபத்துக்குக் காரணம் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here