கோலாலம்பூர்:
விஜயலட்சுமி பூமியில் புதைந்த பகுதியில் காணப்பட்ட தடயத்தை நெருங்குவதில் சிக்கல்
இந்திய நாட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி பூமியில் அமிழ்ந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் இன்று ஏழாவது நாளை எட்டிவிட்டன. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் இடிந்த மண்ணுக்கும், கழிவுநீர் சாக்கடைப் பாதைக்கும் இடைவழியில் சிக்கிக் கிடக்கும் ஒரு தடயத்தை நெருங்குவதில் தீயணைப்பு மீட்பு துறையின் நீர் மீட்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் இருவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை 3.06 மணியளவில் அந்தத் தடயத்தை அவர்கள் நெருங்கி அதனை அப்புறப்படுத்த முற்பட்டனர். கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த இடத்தை நெருங்குவதில் அவர்கள் பலத்த சோதனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
விஜயலட்சசுமி புதையுண்ட பகுதிக்கு சுமார் 80 மீட்டர் தொலைவில் அந்தத் தடயம் காணப்பட்டது. அதனை வெளியில் எடுக்க முழு பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட அந்த இரு வீரர்களும் அரைமணி நேரத்தில் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்களால் அங்கு நீரோட்டத்தைச் சமாளிக்க முடியாத சிக்கல் உருவானதாக அறியப்படுகிறது.









